Sunday, December 25, 2011


பொடிமாஸ் - 12/25/2011

இன்று சென்னை அருகில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஒரு படகு கவிழ்ந்ததில் சுமார் 22 பேர் இறந்து விட்டனர். அது ஒரு மீனவப் படகு என்றும், அதிகரப் பூர்வமான உரிமம் எதுவும் இல்லாமல் விடப்பட்டதாகவும் தெரிகிறது. லைப் வெஸ்ட் போன்ற பாதுகாப்புகள் இல்லாமல், தேவையான உரிமங்கள் இல்லாமல் விடப்படும் படகுகளில் உல்லாசத்திற்காக பயணித்தால் இப்படித்தான் நடக்கும். இறந்தவர்கள் மீது அனுதாபத்திற்கு பதிலாக கோபமே வருகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு தான் உண்மையில் அனுதாபம் தேவை. இதை பார்த்தாவது சிலராவது திருந்தினால் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். பொதுவாக வெளி நாட்டிலிருந்து இந்தியா வரும் இந்தியர்கள் இது போன்ற பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி கருத்து தெரிவித்தால் சீன் போடுவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் வெளி நாட்டில் வசிப்பவர்களுக்கு எது தெரியுமோ தெரியாதோ, மனித உயிரின் மதிப்பு அவசியம் தெரியும்.



விளையாட்டு வீரர்களுக்கும் பாரத ரத்ணா விருது வழங்க இயலும் விதமாக ஒரு சிறு விதியை மாற்றி அமைத்திருக்கிறது அரசு. பலர் இது சச்சினுக்காக செய்தது என்று கருதுகிறார்கள். எனக்கும் அப்படியே தோன்றுகிறது. ஆனால் அதில் தவறொன்றும் இல்லை. இலக்கியத்திற்காகவும், இசைக்காகவும் விருது கொடுக்கலாம் என்றால் விளையாட்டிற்காகவும் கொடுக்கலாம். என்ன?, கிரிக்கெட் அல்லது சச்சின் என்றாலே பலருக்கும் வயிற்றெரிச்சல் வந்து விடும்.



இன்று படித்த மற்றுமொரு செய்தி. இந்திய முஜாஹிதீனின் தலைவனை ஒரு கள்ள நோட்டு வழக்கில் கைது செய்து டில்லி போலீஸார் மூன்று மாதங்கள் சிறையில் வைத்திருக்கிறார்கள். பின்னர் அவன் யாரென்று தெரியாமல் அவனை விடுதலை செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் அவன் திட்டமிட்டு செயல்படுத்தியது தான் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு. வாழ்க நமது புலனாய்வு.



Don 2 - The King is Back அட்டகாசமாக இருக்கிறது. ஆங்கிலப் படங்களை விட நன்றாக இருந்தது. இம்மாதிரியான ஆங்கிலப் படங்கள் பொதுவாக ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால் இரண்டரை மணி நேரத்திற்கு திரைக்கதை அமைப்பது எளிதல்ல. "The King is Back" என்பது பொதுவாக ஷாருக்கை குறித்து கூறப்பட்டாலும், எனக்கு என்னவோ ஃபர்ஹான் அக்தரை குறிப்பதாகவே தோன்றியது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் படம் இயக்கி சிக்ஸர் அடித்திருக்கிறார். Welcome back Farhan.



நண்பன் டிரைலர் அட்டகாசமாக இருக்கிறது. ஓமி வைத்யா கேரக்டருக்கு சத்யன் சரியான தேர்வு. நமது எஸ். ஜே. சூர்யா எந்த பாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியவில்லை. கிளைமேக்ஸ் மாற்றி இருக்கிறார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். பார்ப்போம் எப்படி இருக்கிறது என்று. நிச்சயம் விஜய் காவலன், வேலாயுதத்தை தொடர்ந்து நண்பனிலும் ஹாட்ரிக் அடிப்பார் என்றே நினைக்கிறேன்.



ராஜ பாட்டை ராஜ விட்டையாக போய்விட்டது. பீமா, கந்தசாமி என்று மரண மொக்கைகளுக்கு பிறகும் இயக்குனர் சுசீந்திரனின் முந்தைய படைப்புகளின் மீதுள்ள மரியாதையினால் நம்பி போய் இம்மாதிரி ஆப்புகள் வாங்க வேண்டி இருக்கிறது. விக்ரம் நாங்க பாவம் இல்லையா? எவ்வளவு நாள் தான் நாங்க வலிக்காத மாதிரியே நடிக்கறது?



குளிர் காலம் தொடங்கி விட்டது. குளிர் உறைநிலை வெட்பத்தில் இருக்கிறது. மாண்டியை வாக்கிங் அழைத்து செல்வது கடினமாக இருக்கிறது. இரண்டு நாட்களாக ஒரே ஜலதோழம் வேறு. கிரிஸ்துமஸ் காரணமாக நாளையும் இங்கு அலுவலகம் விடுமுறை. நாளைக்குள் குணமாகி விட்டால் நல்லது. இல்லையென்றால் கஷ்டம்.



வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

0 Comments: