Thursday, December 01, 2011


அமெரிக்காவில் ஆந்திர கம்யூனிஸ்டுகள்

சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அது ஒரு பூஜை. நண்பர் ஆந்திராவை சேர்ந்தவர். இங்கு அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் நம்மவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. விழா தட புடலாக நடந்து கொண்டிருந்தது.

அப்பொழுது திடீர் என்று ஒரு பரபரப்பு. ஒரு நபர் விழாவிற்கு வந்தார். அவருக்கு ஒரு ஐம்பது அல்லது அறுபது வயது இருக்கும். உடனே பலரும் ஓடி சென்று அவரை அழைத்து வந்து அமர வைத்தார்கள். அதன் பிறகு விழா முடியும் வரை அவரை சுற்றி ஒரு பத்து பேர் இருந்து கொண்டே இருந்தார்கள். எனக்கு அவர் யாரோ பெரிய மனிதர் என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை.

எனதருகில் இருந்த வேறு ஒரு நண்பரிடம் அவர் யார் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆந்திராவின் கம்யூனிஸ்டு கட்சியின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் என்று அவரது பெயரை குறிப்பிட்டார். அவரது மகன் மற்றும் மகள் இருவரும் இங்கே அமெரிக்காவில் வசிப்பதாகவும், அவர்களை பார்க்க வருடத்திற்கு ஒரு முறை இங்கே அவர் வருவதாகவும், விழாவை நடத்தும் நண்பர் அவருக்கு உறவு என்றும் குறிப்பிட்டார்.

எனக்கு முதலில் வியப்பாக இருந்தது. அவர் மீது மரியாதை அதிகம் வந்தது. தனக்கு இருக்கும் கம்யூனிஸ்டு கொள்கையை தனது பிள்ளைகளிடம் திணிக்காமல் இருக்கிறாரே என்று. எனது வியப்பையும் மரியாதையையும் அந்த நண்பரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் லேசாக சிரித்தார். அதில் ஒரு நக்கல் தெரிந்தது. அதற்கான காரணம் என்ன என்று வினவினேன். அவர் அங்கு அப்பொழுது பலரும் இருப்பதால் அடுத்த நாள் அலுவலகத்தில் சொல்வதாக சொன்னார்.

அடுத்த நாள் அவர் அலுவலகத்தில் சொன்ன செய்திகள் எனக்கு பெரும் வியப்பளித்தது. அதன் சுருக்கம் கீழே.

ஆந்திராவில் உள்ள கம்யூனிஸ்டுகள் பெரும்பாலானோர் தங்கள் மக்கள் அமெரிக்காவில் இருப்பதையே விரும்புகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் பல ஆண்டுகள் இருந்தாலும், அவர்கள் பச்சை அட்டை தான் வாங்குகிறார்களே தவிர அமெரிக்க குடியுறிமை வாங்குவது இல்லை. ஏனென்றால் அவர்களில் பலருக்கும் தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்களை விட விவசாய நிலங்கள் அதிகம். வெளிநாட்டு குடியுறிமை பெற்றவர்கள் விவசாய நிலங்களை வைத்துக் கொள்ள பல சட்ட சிக்கல்கள் இருப்பதாலும், பின் காலத்தில் இந்தியாவிற்கு வந்து கட்சியிலும், அரசியலிலும் பங்கு வகிக்க சிக்கல்கள் வந்து விடக் கூடாதென்றும் அவர்கள் முன் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். இதற்கே வாய் பிளந்த நான் கடைசியாக அவர் சொன்னதை கேட்டு மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். முந்தைய நாள் விழாவிற்கு வந்த நமது கம்யூனிஸ்ட் தலைவர் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஒரு காரை ஜெர்மனியிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்திருக்கிறார் என்பது தான் அது.

இவர்களுடன் நான் தமிழகத்தின் கம்யூனிஸ்ட் தலைவர்களான நல்லகண்ணு, சங்கரையா, தா. பாண்டியன், ராமகிருஷ்ணன் போன்றவர்களை ஒப்பிட்டேன். ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நல்லகண்ணு அவர்கள் கட்சி தொண்டர்கள் பல நாட்கள் தொடர்ந்து திரட்டி அளித்த சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்க மறுத்து அதை கட்சிக்கே திருப்பி அளித்தார்.

நல்லா இருங்கடே! என்று தான் சொல்ல தோன்றியது.

0 Comments: