Tuesday, November 29, 2011


பொடிமாஸ் - 11/29/2011

கொலவெறி பாடல் ஹிட்டானதில் யாருக்கு நன்மையோ இல்லையோ மருந்து விற்பனையாளர்களுக்கு நன்மையே. பலருக்கு ஜெலூஸில் தேவை படுகிறது. சமீபத்திய சேர்க்கை எழுத்தாளர் ஞாநி. பாடல் வெளியான 15 நாட்களுக்குள் ஒரு கோடி முறைக்கும் மேல் இணையத்தில் பார்க்கப்பட்டு இருக்கிறது. போகிற போக்கில் அதெல்லாம் பொய், இவர்களே செட் அப் செய்தது என்று சேற்றை வாரி இறைத்து விட்டு போயிருக்கிறார். மக்களை கவரும் கலை படைப்பே உன்னதமான படைப்பு. இக்கால ரசிகர்களுக்கு இது தான் பிடித்திருக்கிறது. இதை கூட புரிந்து கொள்ளாமல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள். ஒப்பாரி வைப்பவர்கள் வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள், ஈற்றடி முச்சீர் ஏனையடிகள் நாற்சீர் கொண்டு ஒரு வெண்பா எழுதி, இசையமைத்து இணையத்தில் வெளியிடுங்களேன், இதற்கு போட்டியாக. யார் வேண்டாம் என்று உங்களை தடுத்தது? நன்றாக இருந்தால் அதையும் கொண்டாடிவிட்டு போகிறோம்.



சச்சினின் நூறாவது நூறு கடைசியில் இந்த தொடரில் நடக்கவில்லை. எனக்கு அதை பற்றிய பெரிய எதிர் பார்ப்புகள் ஒன்றும் இல்லை. நடக்கும் பொழுது அது நடக்கும். ஆனால் ரோஜர் ஃபெடரர் அமைதியாக தனது நூறை செயல்படுத்தி முடித்து விட்டார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தனது நூறாவது இறுதி ஆட்டத்தை ஆடி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். வாழ்த்துக்கள் ஃபெடரர்.



சென்ற வாரம் தேங்க்ஸ் கிவிங் நல்ல படியாக சென்றது. நெடு நாட்களுக்கு பின்னர் நான்கு நாட்கள் விடுமுறை. நல்ல ஓய்வு. வியாழக் கிழமை அன்று முழு வான் கோழியை சுட்டு வயிறு புடைக்க சாப்பிட்டேன். சமைத்தது எனது மனைவியின் சகோதரியின் கணவர். நாவில் சுவை இன்னும் அப்படியே இருக்கிறது. முழு வான் கோழியை வெட்டுவதற்கு முன்பு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. அதனால் என்ன? அடுத்த முறை எடுத்து விட்டால் போகிறது.



அடுத்தது விக்ரமின் ராஜபாட்டைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். சரியான மசாலா வேட்டையாக இருக்கும் என்று நம்புகிறேன். பீமாவை இப்படி நம்பி சென்று தான் ஆப்பு வாங்கினேன். சுசீந்திரன் மீது நம்பிக்கை இருக்கிறது. அவரின் நான் மஹான் அல்ல எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒஸ்தி, வேட்டை யெல்லாம் எனது லிஸ்டிலேயே இல்லை. பார்ப்பேனா என்று தெரியவில்லை. விமர்சனங்களை படித்துவிட்டு முடிவெடுக்கலாம் என்று இருக்கிறேன்.



225,000. நம்பரை பார்த்துவிட்டு ஏதோ ஒரு புதிய ஊழல் என்று நினைத்து விடாதீர்கள். நாங்கள் அமெரிக்கா வந்த இந்த ஆறு வருடங்களில் எங்களின் கார்களில் பயணம் செய்த தொலைவின் கிலோமீட்டர் எண்ணிக்கை தான் இது. எவ்வளவு லிட்டர் பெட்ரோலை குடித்திருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது பெருமூச்சு வருகிறது. நாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து அமெரிக்க தலை நகரான வாஷிங்டன் டிசி 36 மைல் தொலைவு. மெட்ரோ ரயில் தடம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு போக்குவரத்து தொடங்கும் என்று தெரிகிறது. அதன் பின்னராவது காரை வீட்டிலேயே வைத்து விட்டு இளைய நிலா கேட்டுக்கொண்டோ, ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் படித்துக்கொண்டோ, இல்லை தூங்கிக்கொண்டோ பயணம் செய்யலாம்.



சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்றிருந்த பொழுது ஒரு ஸ்லோகத்தை கண்டேன். மனதில் சட்டென்று வந்து பதிந்து விட்டது.

சத்யம் ப்ருயாத்; ப்ரியம் ப்ருயாத்;
மத் ப்ருயாத் சத்யம் அப்ரியம்;
ப்ரியம்ச நா அன்ருதம் ப்ருயாத்;
ஈஷா தர்ம சனாதனா

உண்மையை பேசுங்கள்; இனிமையாக பேசுங்கள்;
உண்மையாக இருந்தாலும் கடுமையான சொற்களை பேசாதீர்கள்;
இனிமையாக இருந்தாலும் பொய் பேசாதீர்கள்;
இதுவே இறைவனடியை அடையும் வழி



தமிழ் சினிமாவின் இரு சகாப்தங்கள் நடித்த காட்சி. கூர்மையான வசனங்கள். ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ், வசன உச்சரிப்பு, ஸ்டைல் மற்றும் ஆளுமை அபாரம். கமல் சிறிது அன்டர் ப்ளே செய்திருப்பார். காட்சியை பார்த்துவிட்டு கமல் நாயகன்; ரஜினி வில்லன் என்று நினைத்து விடாதீர்கள். படத்திலேயே அருவருப்பான பாத்திரம் கமலுடையது. நான் கமலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது இம்மாதிரி பாத்திரங்களில் விசனமில்லாமல் நடித்ததற்காகத்தான்.

0 Comments: