Wednesday, November 16, 2011


புழுவும், சிரங்கும், இலக்கியவாதியும் பின்னே நானும்

சமீபத்தில் விமலாதித்த மாமல்லன் அவர்கள் எழுதிய இந்த நக்கல் பதிவை படிக்க நேர்ந்தது. இந்த எழுத்தாளர்களுக்கே இதுதான் பிரச்சனை. தங்கள் தலையில் தாங்களே கிரீடத்தை வைத்துக் கொள்கிறார்கள். கிரீடத்தினால் தலையில் புண், சொறி, சிரங்கு எது வந்தாலும் கவலை படுவதில்லை. அந்த சிரங்குகளை சொறிந்து விடுபவர்களுக்கு தான் அவர்கள் தங்களது நட்புவட்டம், வாசகர் சதுரம் என்று எல்லாவற்றிலும் இடம் கொடுக்கிறார்கள். முகம் சுளிப்பவர்களுக்கு இருக்கவே இருக்கின்றன இம்மாதிரி நக்கல் பதிவுகள்.

ஒரு டம்மி பீஸ் என்னிடம் வந்து தான் கணிப்பொறியில் பெரிய தில்லாலங்கடியாக என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் எனக்கு இம்மியும் கோபம் வரப்போவதில்லை. உண்மையாக சொன்னால் எனக்கு அதனால் மகிழ்ச்சியே அதிகம் ஏற்படும். என்னையும் மதித்து கேள்வி கேட்கிறானே என்று. இவர்களுக்கு மட்டும் ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? "அனைவரும் இணையத்திலேயே ஓசியில் படித்துவிட்டால் தொழில் முறை எழுத்தாளர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேட்கிறார். நியாயம் தான். சுமார் நூறு திரை விமர்சனப் பதிவுகள் வந்தால் ஒரு புத்தக விமர்சனப் பதிவு வருகிறது. இது தான் இவர்களது உண்மையான கவலையா? இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று தெரியவில்லை.

இல்லை இலக்கியம் படைப்பதும் பொட்டி தட்டுவதும் ஒன்றில்லை என்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் உங்களுக்கு வருணாஸ்ரமத்தின் மூலத்தினை நினைவுபடுத்தும் கடமை எனக்கு இருக்கிறது. வசதியாக பார்பனர்களையும், வருணாஸ்ரமத்தினையும் திட்டிக் கொண்டே இலக்கியம் படைப்பது உயர்ந்தது பொட்டி தட்டுவது தாழ்ந்தது என்று கூறிக் கொண்டிருக்கலாம். அதனை பொட்டி தட்டுபவர்கள் உருவாக்கிய இணையத்தில் வெட்கமே இல்லாமல் எழுதவும் செய்யலாம்.

"எழுத முயற்சிக்கையில், புதியவர்களில் நன்றாக எழுதுபவர்களைவிட மொக்கையாய் எழுதுபவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டு நாம் அவ்வளவு மோசமில்லை என்று தேற்றிக்கொள்வது, உற்சாகம் அளிக்கவல்ல நல்ல உத்தி." இது பகடியே அல்ல. பகடி என்று நினைத்துக் கொண்டு ஒரு நல்ல கருத்தையே உளறி இருக்கிறார். எனக்கு மேலே உள்ள ஆயிரம் பேரை கண்டு பெருமூச்சு விடுவதையோ அல்லது பொறாமை படுவதையோ விட எனக்கு கீழே உள்ள நூறு பேரை நினைத்து மகிழ்வது சிறந்ததே. இல்லை, இது பகடி தான் என்று நினைப்பவர்கள் கீழே Alan Kay சொல்லி இருப்பதை படியுங்கள்.

Anybody in his right mind should have an inferiority complex every time he looks at a flower. - Alan Kay

அடுத்தது அதை விட மொக்கை. "தேடித்திரிந்துத் தெருவில நிற்பதுதான் தீவிர எழுத்து. தெருவில் நின்றதை உண்மையாக எழுதினால் இலக்கியமாகலாம்." எதற்கு தெருவில் நிற்க வேண்டும்? நின்றபின், எதற்கு இலக்கியம் படைக்க வேண்டும்? ஒரு பள்ளி ஆசிரியர் மாதம் 50 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தில் மாதம் 1500 ரூபாய் சம்பளம் தந்த கல்கத்தா கார்பரேஷன் தலைவர் பதவியை தூக்கி வீசி விட்டு, சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்று, வெள்ளையனால் நாடு கடத்தப் பட்டு, பிறந்து இரண்டு வயதே ஆன தனது மகளை நாட்டின் சுதந்திரத்திற்காக வெளிநாட்டில் விட்டு விட்டு மீண்டும் இங்கு வந்து போராடி உயிர் விட்ட நேதாஜி அவர்களுக்கு இந்தியா அளித்த பரிசு 1992 ஆம் ஆண்டு அளித்த பாரதரத்ணா விருது. MGR அவர்களுக்கு பாரதரத்ணா அளிக்கப்பட்டது 1988 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி அவர்களுக்கு பாரதரத்ணா அளிக்கப்பட்டது 1991 ஆம் ஆண்டு, நேதாஜிக்கு பாரதரத்ணா அளிக்கப்பட்டது 1992 ஆம் ஆண்டு. இதுதான் இன்றைய இந்தியாவின் யதார்த்த நிலை. இங்கே வாழும் பொழுதே வாழ்ந்து விட வேண்டும் இறந்தபின் புதைக்க நிலம் கூட கிடைக்காது. இப்படி இருக்கும் ஊரில் தெருவில் நிற்க வேண்டுமாம், இலக்கியம் படைக்க வேண்டுமாம்.

இவரை போன்ற இலக்கியவாதிகள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சிரங்குகளின் வாழும் புழுக்கள் தான் சிரங்குகளை பார்த்து அருவருப்பு கொள்வதில்லை. ஏனென்றால் சிரங்குகள் தான் அவைகள் வாழும் இல்லம். அவைகள் பிறப்பதும், உண்பதும், உறங்குவதும், புணர்வதும், இறப்பதும் அந்த சிரங்குகளில் தான். ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சிரங்குகள் அருவருப்பாகத்தான் இருக்கும்.

0 Comments: