Sunday, May 23, 2010

மங்களூர் விமான விபத்து



இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள். அவர்களின் ஆத்மாக்களுக்கு இறைவன் சாந்தி அளிக்கட்டும்.

Saturday, May 15, 2010

Learn to say "No"

"A 'No' uttered from the deepest conviction is better than a 'Yes' merely uttered to please, or worse, to avoid trouble." – Mahatma Gandhi

பொதுவாக யாருக்குமே "இல்லை", "கிடையாது", "முடியாது" போன்ற சொற்களை சொல்ல பிடிப்பதே இல்லை, என்னையும் சேர்த்து. முதல் காரணம் யாரையும் காயப்படுத்தவோ இல்லை ஏமாற்றவோ விரும்பாத மனம், இரண்டாம் காரணம் உறவுகள் முறிந்துவிடுமோ என்ற பயம். அதனாலேயே "சரி" என்று கூறுவது நமக்கு இலகுவாகிறது. ஆனால் "சரி" என்ற பதில் அதனுடன் முடிந்து விடுவதில்லை. "முடியாது" என்று கூறுவதில் சில சங்கடங்கள் உள்ளது போலவே "சரி" என்று சொல்வதிலும் சில சங்கடங்கள் உள்ளது. என்ன பல நேரங்களில் அது நமக்கு தெரிவதில்லை.

நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு முறை ஏதோ ஒன்றுக்கு நாம் "சரி" என்று கூறும் பொழுதும் வேறு ஏதோ ஒன்றுக்கு "முடியாது" என்ற மறைமுக பதிலை அளிக்கிறோம்.

உதாரணத்திற்கு,

1. நமக்கு பிடிக்காத ஒரு திருமணத்திற்கு "சரி" என்று கூறும் பொழுது, நமக்கு பிடித்த திருமணத்திற்கு "முடியாது" என்று கூறி மறுத்தளிக்கிறோம்.
2. நமக்கு பிடிக்காத ஒரு வேலைக்கு "சரி" என்று கூறும் பொழுது, நமக்கு பிடித்த வேலைக்கு "முடியாது" என்று கூறி மறுத்தளிக்கிறோம்.
3. வார இறுதியில் வேலைக்கு வர மேலாளரிடம் "சரி" என்று கூறும் பொழுது, வீட்டில் உள்ளவர்களிடம் நேரம் ஒதுக்க "முடியாது" என்று கூறி மறுத்தளிக்கிறோம்.
4. தேவை இல்லாத செயல்களுக்கு "சரி" என்று கூறும் பொழுது தேவையான செயல்களுக்கு "முடியாது" என்று கூறி மறுத்தளிக்கிறோம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் பலரது வாழ்க்கையை கூர்ந்து கவனித்தோமானால் அவர்கள் சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்பிற்கு "சரி" கூறியதுடன் நில்லாமல் தவறான பல வாய்ப்புகளுக்கு சரியாக "முடியாது" என்ற பதிலை அளித்திருப்பார்கள்.

நீங்கள் உங்களை நேசிக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையை நேசிக்கிறீர்களா? உங்கள் கனவுகளை நேசிக்கிறீர்களா? உங்கள் தொழிலை நேசிக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தை நேசிக்கிறீர்களா? உங்கள் நேரத்தை நேசிக்கிறீர்களா? இதற்கான பதில் "ஆம்" என்றால், இவற்றினை மதிக்காத எந்த ஒரு செயலுக்கும் நீங்கள் "முடியாது" என்ற பதிலையே அளிக்க வேண்டும்.



இனி எவ்வாறு இலகுகாக "முடியாது" என்று மறுத்தளிப்பது என்பதை பார்க்கலாம்.

1. உங்கள் சிந்தனையில் தெளிவாக இருங்கள்

பல நேரங்களில் நாம் "சரி" என்று கூறுவதன் காரணம், நமக்கு "முடியாது" என்று மறுத்தளிக்க போதுமான காரணம் தெரியாதது தான். கவனிக்கவும், "முடியாது" என்று மறுத்தளிக்க நமக்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆனால் அது என்ன என்று தெரியாததினால் பல நேரங்களில் "சரி" என்று கூறிவிடுகிறோம். அதனால் தான் சொன்னேன் உங்கள் சிந்தனையில் தெளிவாக இருங்கள் என்று. உங்களுக்கு தெளிவான சிந்தனை இருந்தால், ஒரு செயலை தொடங்கு முன், இது தேவையா? இல்லையா? அவசியமா? அவசியம் இல்லையா? என்று பகுத்தறிந்து பதிலை அளிக்க முடியும்.

2. "சரி" என்று கூறுவதன் பின்விளைவுகளை உணர்ந்து கொள்ளுங்கள்

பல நேரங்களில் நாம் சிறு சிறு செயல்கள் தானே என்று நம்மால் இயலாது என்ற நிலையிலும் "சரி" என்று சொல்லிவிடுகிறோம். அதன் பின்விளைவுகளை பற்றி அறிந்து கொள்ளாமல். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல பல சிறு செயல்கள் சேர்ந்து பெரியதாகி நம்மால் நமக்கு தேவையான எந்த முக்கியமான செயலையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். இன்னும் சில நேரங்களில் "சரி" என்று ஒப்புக் கொண்டு நம்மால் செய்ய முடியாமல் போனால் தேவை இல்லாத வருத்தங்களும், ஏமாற்றங்களும் ஏற்படும்.

3. "முடியாது" என்று கூறுவது ஒன்றும் பெரிய பாவம் இல்லை என்பதை உணருங்கள்

நம்மிடம் முடியுமா? இல்லை முடியாதா? என்ற ஒரு கேள்வி கேட்கப்படும் பொழுது "முடியும்" என்று சொல்வதற்கு நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை "முடியாது" என்று சொல்வதற்கும் இருக்கிறது. அப்படி சொல்வதினால் நம்மை தவறாக நினைப்பார்களோ? நம் மீது கோபம் கொள்வார்களோ? நம்மை பற்றிய அவதூறாக பேசுவார்களோ? அவர்கள் மனது புண்பட்டு விடுமோ? என்ற கவலையெல்லாம் தேவையற்றது. வாழ்வில் இன்பமும், துன்பமும் கலந்து இருப்பதை போலவே, கேள்விகளுக்கு "சரி", தவறு", "முடியும்", "முடியாது" போன்ற பதில்களும் கலந்தே இருக்கின்றன. ஒருவரால் வாழ்நாள் முழுதும் "சரி" என்ற பதிலை எல்லா கேள்விகளுக்கும் அளித்துக் கொண்டே இருக்க முடியாது. அப்படி ஒரு வேளை யாராவது நீங்கள் அளித்த "முடியாது" என்ற பதிலால் உங்கள் மீது கோபம் கொண்டாலும், அதனால் வருந்த தேவை இல்லை. நூறு முறை "முடியும்" என்று சொல்லி விட்டு நூற்றியோராவது முறை "முடியாது" என்று சொல்லி நட்பை கெடுத்துக் கொள்வதை விட முதல் முறையே அப்படி சொல்லி கெடுத்துக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை.

4. மரியாதையாக மறுத்தளியுங்கள்

"இல்லை", "கிடையாது", "முடியாது" போன்ற பதில்கள் கத்தியின் மீது நடப்பதினை போன்றது. சரியாக சொல்லத் தவறினால் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். "முடியாது" என்று கூறுவதினாலேயே மற்றவரின் மீது நமக்கு மரியாதை இல்லை என்று பொருள் இல்லை. அதனால் மிகவும் மரியாதையுடன் மறுத்தளியுங்கள். தன்மையாக கூறுங்கள். எழுத்தின் மூலம் தெரியப் படுத்த வேண்டும் என்றால் முதலில் எழுதியதை ஒருமுறைக்கு நான்கு முறை படித்து பாருங்கள். தொலைப் பேசியிலோ, நேரிலோ தெரியப் படுத்த வேண்டும் என்றால் குரலில் அமைதி தெரியவேண்டும். பதட்டத்துடனோ இல்லை கோபமாகவோ எதையும் மறுக்க கூடாது. முடிந்தால் அவர்களுக்கு மாற்று ஆலோசனை கூறுங்கள். தாங்கள் மறுப்பதற்கான காரணத்தையும் அமைதியாக கூறுங்கள்.

5. மாற்று பதில்களை தேடுங்கள்

பல நேரங்களில் நமக்கு முன் பின் தெரியாதவர்கள் அல்லது நன்கு பழக்கம் இல்லாதவர்கள் நம்மால் அளிக்க முடியாத உதவியை கேட்க நேரிடும். அத்தகைய நேரங்களில் பதிலை தாமதமாக அனுப்பியோ இல்லை பதிலே அனுப்பாமலோ கூட நமது மறுமொழியை அளிக்கலாம். No reply is also a form of reply.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், "முடியாது" என்று மறுத்தளிப்பது பல நேரங்களில் அவசியமான ஒன்று. அதை எப்படி செய்வது என்று புறிந்து செய்யுங்கள். வெற்றி உங்களுக்கே.