Thursday, October 22, 2009


எனக்கு மட்டும் ஏன்?

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

திவ்யாவை மீண்டும் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்து பார்த்தது இல்லை. எட்டு ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். எனது அலுவலகத்தில் எனது குழுவில் புதிதாக வேலைக்கு சேர்ந்தாள் திவ்யா. அவளை அழைத்து வந்த எனது டேமேஜர் அவளது பெயரை மட்டும் கூறி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். முதலில் பார்த்த பொழுது அவளது கண்களில் ஒரு வித மிரட்சி தெரிவதை போல இருந்தது எனக்கு. சிறிது அலட்சியத்துடனேயே என்னை நான் அறிமுகம் செய்து கொண்டேன். அப்பொழுது நான் டீம் லீட் என்பதால் அவளிடம் சிறிது பந்தாவும் செய்து கொண்டேன்.

அடுத்த நாள் ஒரு கலந்தாய்வு இருந்தது. எனது டேமேஜர் திவ்யாவையும் அழைத்து செல்லும் படி கூறினார். அவளது இருப்பிடத்தை தேடும் பொழுது தான் தெரிந்தது அவள் பொட்டி தட்டுபவள் இல்லை. எங்கள் எல்லாருக்கும் பெரியாத்தாவாக சேர்ந்திருக்கிறாள் என்று. உடனே எனது அலட்சியம் மிரட்சியாக மாறிப் போனது. அவளை பற்றி சிறிது விசாரித்த பொழுது அவள் CA, MBA என்று தெரிந்தது. CA வில் இந்திய அளவில் மூன்றாவது ரேங்க். MBA படித்தது IIM B. மேலும் அவள் கண்களில் முன்னர் தெரிந்தது மிரட்சி அல்ல, அவளது முழியே அப்படி தான் என்பதும் விசாரித்ததில் தெரிந்தது. நாங்கள் சுமார் 200 பேர் அவளது கீழ் வேலை செய்யப் போகிறோம்.

பெண் டேமேஜர்கள் என்றாலே எனக்கு கிலி. முன்னரே மாண்டவி சிங் என்று ஒரு டேமேஜரிடம் செருப்படி வங்காத குறையாக ஓராண்டு காலம் தள்ளோ தள்ளென்று தள்ளினேன். இப்பொழுது தான் ஒருவழியாக ஒரு ஆண் டேமேஜர் கிடைத்தார். கிடைத்த ஒரு மாதத்தில் இப்படி ஒரு இடி. சனி பகவான் எனக்காக ஒவர் டைம் செய்கிறார் என்று நினைக்கிறேன்.

அதன் பிறகு என்ன?,

செல்லாத்தா! செல்ல மாரியாத்தா!
எங்கள் சிந்தையில் வந்து அரை விநாடி நில்லடி நீ ஆத்தா.

கண்ணாத்தா! உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லடி நீ ஆத்தா.

போன்ற சில பல பாடல்களை பாடி அவளது நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற பாடுபட்டேன். மம்மியை பார்த்த மாண்புமிகுவை போல பம்மினேன். பைக்கில் எட்டெல்லாம் போட்டு காண்பித்தேன். ம்ஹூம்........... ஒன்றும் உதவவில்லை.



"ஒரு டீம் லீட்னா ரெஸ்பான்ஸிபிலிட்டி வேணாம்? இப்படியா பொறுப்பில்லாம இருக்கிறது?"

"மீட்டிங்க்கு நோட் பேட், பேணா எடுத்துட்டு வரனும்னு தெரியாதா?"

"நாளைக்கு டெப்லாய்மென்ட். இன்னிக்கு வந்து இந்த கேள்விய கேக்கறீங்க. முன்னாடியே கேட்டு தொலைக்க வேண்டியது தானே?"

"கிளையன்ட் கிட்ட என்ன சொல்லனும்னு ஒரு விவஸ்தையே கிடையாதா?"

இப்படி அவள் என்னை கேவலமாக திட்ட. நான் அவளிடம் திட்டு வாங்க. மீண்டும் அவள் என்னை மிகவும் கேவலமாக திட்ட. நான் மீண்டும் அவளிடம் திட்டு வாங்க. நான் ஸ்டாப் கொண்டாட்டம் தான். நானும் எனது குருநாதர் திரு. டெலெக்ஸ் பாண்டியனை மனதில் நினைத்துக் கொண்டு இதையெல்லாம் ஒரு ஜாலியாகவே எடுத்துக் கொண்டு போய்க்கொண்டே இருப்பேன்.

அந்த ஆண்டு அப்ரைசலில் ஒரு பதினோரு பேர் மூத்திர சந்திற்கு என்னை அழைத்து சென்று ஒரு மூனு மணி நேரம் அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடி பின்னி மூனே முக்கால் ரூபாய் இன்க்ரிமென்ட் கொடுத்தனுப்பினார்கள். டாக்ஸ் போக மாதம் இரண்டே கால் ரூபாய் அதிகம் வரும் என்ற கூடுதல் தகவல் இங்கே தரப்படுகிறது.

அப்பொழுது என் வயிற்றில் பீர் வார்த்தது போல ஒரு செய்தி வந்தது. எங்கள் குழுவில் மூவரை தேர்ந்தெடுத்து வேறு ஒரு குழுவிற்கு மாற்றல் செய்கிறார்கள் என்று. நான் உடனே சென்று எனது டேமேஜரிடம் என்னையும் மாற்றல் செய்யுமாறு கோரிக்கை விடுத்தேன். புதிய டெக்னாலஜி, டொமைன் என்று பீலா விட்டு அவரை ஏமாற்றினேன். அவரும் அதற்கு பரிந்துரை செய்து எனக்கு மாற்றலும் வந்தது.

மாற்றல் வந்த உடன் முதல் வேலையாக நமது பெரியாத்தாவிடம் சென்று எனது மாற்றலை பற்றி கூறி விடலாம் என்று சென்றேன். அங்கு போனால், எனது டேமேஜரும் அங்கிருந்தார். அங்கு போன பிறகு தான் எனக்கு தெரிந்தது மாற்றலாகி போகும் மூவரில் பெரியாத்தாவும் ஒருவர் என்று. கடவுளே!....... நமக்கு யாரும் வெளியிலிருந்து ஆப்பு வைக்க வேண்டாம். நாமாக ஆப்பு இருக்கும் இடங்களை தேடி சென்று உட்கார்ந்து கொள்கிறோம்.

அப்படி இப்படி என்று ஒரு வழியாக இரண்டாண்டுகள் ஓட்டி விட்டேன். ஒரு நாள் பெரியாத்தா எங்களிடம் வந்து தனக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதாகவும் தான் அமெரிக்கா போகப் போவதாகவும் குறிப்பிட்டார். அவர் கிளம்பிய நாளில் நான் குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யுமாறு என் தந்தையிடம் கூறினேன். தோஷம் நீங்கி விட்டதல்லவா.

நானும் அடுத்த இரண்டாண்டுகளில் கேக்ரான் மேக்ரான் கம்பெனியின் கிளை ஒன்று அமெரிக்காவில் இருப்பதாக கேள்விப்பட்டு கண்டவன் காலில் எல்லாம் விழுந்து ஒரு வழியாக அமெரிக்கா வந்து சேர்ந்தேன். முதல் நாள் வேலைக்கு சென்று, புதிய டேமேஜரை பார்த்து "மேய்ன் கஜாகா தோஸ்த் ஹூன்." என்றேன். அதற்கு அவர் "மீரு எவரு? நாக்கு தெல்லிதே" என்று மஹா ப்ரஸாதத்தை கையில் கொடுத்தார். பின்னர் தான் தெரிந்தது இனி நானே வேலை தேடி, வேலைக்கு சேர்ந்து, மாதம் பணத்தை வாங்கி அதை கேக்ரான் மேக்ரான் கம்பெனியின் முதலாளியிடம் கொடுத்து பின்னர் அவர் அதிலிருந்து பிட்டு தரும் பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று. திரும்பி இந்தியா செல்லலாம் என்றால் தங்கமணியின் பூரிக் கட்டையை தாங்கும் சக்தி என்னுடம்பில் இல்லாததால் ஒப்புக் கொண்டேன்.

பின்னர் ஒரு வழியாக ஒரு ஏமாந்த சோனகிரியை பிடித்து நான் வானத்தை வில்லை வளைப்பேன் என்றும், மணலை கயிறாய் திரிப்பேன் என்றும் கூறி ஒரு வேலையை வாங்கி இன்று தான் எனது முதல் நாள். வென்டார் மேனேஜ்மென்ட் ரெப் என்னை அழைத்து சென்று ஒவ்வொருவராய் அறிமுகம் செய்து கடைசியில் எனது கிளையன்ட் டேமேஜரை அறிமுகம் செய்து வைத்தார்.

"This is Divya Reddy. You will report to her and she will be taking care of you while you are here."

எனக்கு அவள் சொன்னது எதுவுமே காதில் விழ வில்லை. காலையில் தொலைப்பேசியில் அம்மா சொன்னது மட்டுமே மனதிற்குள் அசிரீரியாக ஒலித்தது. "இன்னிக்கு சனி பெயர்ச்சி. அதான் திரு நள்ளாறு கோவிலுக்கு போய்ட்டு வந்தோம்."

சொல்லுங்கள், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

0 Comments: